அருள்மிகு வெள்ளிங்கிரி ஆண்டவர் திருக்கோவில் -பூண்டி

Arulmigu Velliangiri Aandavar Temple- poondi

மூலவர் : வெள்ளிங்கிரி ஆண்டவர்

அம்மன் : மனோன்மணி

தீர்த்தம் : பாம்பாட்டி சுனை என்ற தீர்த்தம்

பழமை : 2000-3000 வருடங்களுக்கு முன்

தென்கயிலை என பக்தர்களால் அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலையானது கோயம்புத்தூர் மாவட்டம் பூண்டி எனும் ஊரிலிருக்கும் வெள்ளியங்கிரி மலைத் தொடரில் ஏழாவது மலையாகிய கயிலாயங்கிரியே சிவ சொரூபமாக தோற்றமளிக்கிறது.சர்வம் சிவமயமாக விளங்கும் பிரபஞ்சத்தில் உத்திர கயிலாயம் சூட்சம நிலையில் அமைந்துள்ளது. மத்திய கயிலாயம் திபெத்தில் உள்ளது. தட்சிண கயிலாயம் வெள்ளியங்கிரி மலையாகும். இதனால் தென்கயிலாயம் என்றும் அழைக்கப்படுகிறது. சப்தரிஷிகளில் ஒருவரான சித்தர் அகத்திய முனி தவம்புரிந்த மலையாகும். வெள்ளியங்கிரி, அகத்திய பரம்பரையில் வரும் ஞானியர் அனைவருக்கும் வழிபாட்டுத்தலமாக விளங்குகிறது. ஆதி சங்கரர் வழிபட்ட இடமாகவும் போற்றப்படுகிறது.

இங்கே உள்ள குகையில்தான் சிவபெருமான் திருக்காட்சி அருள்கிறார்.தென்னகத்திலேயே மிகவும் சக்தி வாய்ந்த புண்ணியத் தலம் இது. இங்கு ஆண்டி சுனையில் நீராடுவது ஒரு முக்கிய நிகழ்வாகும்.தென்கயிலாயம் எனக்கூறப்படும் இத்தலத்து இறைவனிடம் எது வேண்டினாலும் கிடைக்கும். சிவன் அமர்ந்த மலை என்பதாலும் கயிலாயத்திற்கு ஒப்பான தட்பவெட்ப நிலை இங்கு நிலவுவதாலும் இம்மலை தென்கயிலாயம் எனப் போற்றப்படுகிறது.

தல பெருமை :

உமையவள் இறைவன் திரு நடனத்தைக் கண்டுகளிக்கும் முதன்மை பேறு தனக்கே உரியதென்றும், தம் பொருட்டு ஒரு திருநடனம் ஆடிக்காட்டி அருளுமாறு வேண்டினார். இறைவனும் அகமகிழ்ந்து உமையவள் கண்டு மகிழ மூலஸ்தானத்திற்கு அருகே உள்ள வெள்ளியம்பலத்தில் திருநடனம் புரிந்தார். அப்படி திரு நடனம் புரிந்த மேடை பல்கலை மேடை என அழைக்கலாயினர். அப்பெயர் நாளடைவில் திரிந்து பல காரமேடை என தற்சமயம் வழங்கி வருகிறது. தேவர்கள், முனிவர்கள், சித்தர்கள், நாரத மகாமுனிவர் மற்றும் ஆதிசேஷன் ஆகியோர் வழிபட்ட தலம் என்ற பெருமையினைப் பெற்றது.


அர்ஜூனன் கடுந்தவம் புரிந்து பாசுபதம் பெற்றதும் முக்தி பெற்றதும் இத்தலமே. சிவபெருமான் உமயவளின் வேண்டுதலின்படி திருநடனம் ஆடியதும் இத்தலத்தில் தான்.வெள்ளிமலையானை நினைத்து ஆண்டுக்கு ஒரு முறையாவது இத்தலத்திற்கு வருகை தருவோர்க்கு எல்லா பயனையும் நல்குவார்.இத்திருக்கோயிலில் சித்ரா பவுர்ணமி மிகவும் விசேஷமாக கொண்டாடப்படுகிறது.


தல வரலாறு:

கொங்குநாட்டின் மேற்கு எல்லையில் இறைவன் சிவ பெருமானின் திருவுருவாக விளங்குவது தென் கயிலாயமென்னும் வெள்ளியங்கிரி. இறைவன் பஞ்சலிங்கமாக விளங்கும் இத்தலம் இரசதகிரி, தக்கிண கைலாயம், பூலோக கைலாயம் என வழங்கப்படுகிறது. சிவபெருமானுக்கு மாறாக தக்கன் செய்த வேள்விக்கு தேவர் முனிவர்கள் சென்றதனால் இறைவன் வேள்வியை சினந்து அழித்தார். தேவர் முனிவர்களை சபித்தார். தான் தன் முகங்களை ஐந்து கிரிகளாகக் கொண்டு கொங்குநாட்டில் மறைந்தார். சாபம் நீங்கப் பெற்ற தேவர் முனிவர்கள் சிவபெருமானைக் காண சென்றனர். நவகிரக பீடிதங்கள் நீங்கி பழநி திருவாவினன்குடி கன்னிகாவனத்தில் புரட்டாசி மாதம் ஐந்து வாரம் தவம் இயற்றி சனிபகவான் அருள்பெற்றும், ஐப்பசி ஐந்து வாரம் பவானியில் துலாமுழுக்கு செய்தும், கார்த்திகை மாதம் ஐந்து வாரங்களில் மேற்கண்ட பஞ்சகிரிகளுக்கும் சென்று பஞ்சமுகங்களைத் தொழுதும் பேறுபெற்றனர். முடிவில் ஐந்தாம் வாரத்தில் மயேசு கிரியில் (வெள்ளியங்கிரியில்) இறைவனைக் கண்டும் வணங்கி பேறுபெற்றனர். தீராத நோய் தீர்க்கும் தீர்த்தமாம் ஆண்டிசுனை தீர்த்தம் உள்ளது. அர்சுனன் கடுந்தவம் புரிந்து பாசுபதம் பெற்றதும், முக்தி பெற்றதும் இத்தலமே என்று புராணவரலாறு கூறுகிறது.

உமயவள் வேண்டுதலின் பேரில் திருநடனம் ஆடியதும் இத்தலமே. அதுவே இப்போது பலகார (பல்கலை) மேடை என்று அழைக்கப்படுகிறது. ஆற்றா மக்களின் அரும் பசிகளைவோர் மேற்றே உலகின் மெய்நறி வாழ்க்கை என்பதுபோல் காசியில் ஆயிரம் அன்னதானம் செய்து பெரும்பயனை இந்த கயிலையின் சாரலில் ஒரு பிச்சையிட்டபோது அடைவர். இறைவனே இயற்கையில் எழுகின்ற இன்னொளியே நீ எல்லாமாகி எங்கும் விளங்குகின்றாய். என்னைப் பற்றிய பாவங்கள் நீங்குமாறு இத்தலத்தில் அருள்புரிய ஒருநாள் ஒரு பொழுதாகிலும் வெள்ளிமலையானை நினைத்து ஆண்டுக்கு ஒரு முறையாவது இத்தலத்திற்கு வருகை தருவோர்க்கு எல்லா பயனையும் நல்குவார்.


திருக்கோயில் திறக்கும் நேரம்:

கீழே உள்ள வெள்ளிங்கிரி ஆண்டவர் கோயில் காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

திருவிழா:

இத்திருக்கோயிலில் சித்ரா பவுர்ணமி மிகவும் விசேஷமாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் லட்சக்கணக்கான பக்தர்கள் இத்திருவிழாவில் கலந்து கொள்வர். அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம், சிவராத்திரி மற்றும் ஆருத்ரா தரிசனம் ஆகிய தினங்களில் சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள் நடைபெறும்.

No posts.
No posts.